அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

15.11.13

சீரமைக்கப்படுமா மருதுகோவில்?


மருது பாண்டியர் படத்தை பயன்படுத்தி பலரை மகிழ்விக்கும் கட்சிகள் கவனத்திற்கு:-

நரிக்குடியில் உள்ள முக்குளத்தில் மருதுபாண்டியர்கள் மற்றும் அவர் மனைவிமார்கள் கோவில் இடியும் நிலையில் சிதைந்து உள்ளது. இதை சீரமைக்க முன்வர தயராகுங்கள். திருப்பணிகள் பல செய்த எம்மன்னன் கோவிலுக்கே இந்ந நிலையா ? நாடு போற்றும் மருதுபாண்டியரின் ஆலயத்தை திருப்பணி செய்ய வாரீர்.

13.11.13

மருது என்ற மாவீரம்

மாமன்னர் மருது பாண்டியர்களுடைய வீரமும், நாட்டை காலனியாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திய, வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களது போராட்டமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழனுடைய பங்களிப்புகளாக, ஒட்டுமொத்த தமிழகமும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய நிகழ்வு.

இன்று உலகமயமாக்களின் காலத்தில் அந்நிய நாட்டு ஊடுருவல்கள் சமூக, பொருளாதார, ராணுவ, பண்பாட்டு ரீதியான, சந்தை ரீதியான உறவுகளில் உள்ளே நுழையும் சூழலில், கடந்த காலங்களில் தமிழன் அஞ்சாமல் அந்நியரை எதிர்த்துப் போராடிய வரலாறுகளை நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

1748 ஆம் ஆண்டில் டிசம்பர் 15ஆம் தேதி உடையார்சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாளுக்கும் மகனாக இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள நரிக்குடியில் பெரிய மருது பிறந்தார். 5 ஆண்டுகள் கழித்து 1753-ல் சின்ன மருது பிறந்தார்.

சிவகங்கையில் விஜயரகுநாத சேதுபதி அரசராக இருந்தபோது, தகுதிவாய்ந்த இளவல்களை தேடியபோது, மருது சகோதரர்களை அனுப்பி வைத்தார்கள். 1761 ஆம் ஆண்டில் அவர்களை முத்து வடுகநாதரும், வேலு நாச்சியாரும் சிவகங்கை அழைத்து வந்தனர். வேட்டையாட சென்ற மன்னருக்கு உதவி செய்ய சென்ற மருது சகோதரர்கள், வேங்கையை எதிர்கொண்டு வீழ்த்தியதாகவும் வரலாறு உண்டு.

அரசி வேலு நாச்சியாருக்கு போர் பயிற்சியை கொடுத்தவர் சின்ன மருது என்றும் சொல்வார்கள். விஜயரகுநாத சேதுபதி மன்னன் சேது நாட்டை வென்றான். நாட்டை ஆளவந்த ஆங்கிலேயர்களின் தளபதி ஜோசப் சுமித் தஞ்சை மீது போர் தொடுத்தான். தஞ்சை மன்னன் ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான்.

ஆங்கிலேய படையுடன் புதுக்கோட்டை தொண்டைமான் படை உதவி செய்து ராமநாதபுரத்தை முற்றுகையிட்டது. அதன் பிறகு சிவகங்கை சீமையை கைப்பற்ற நவாப் சூழ்ச்சி செய்தான். முத்து வடுகநாதர் போரில் மரணமடைந்தார். வேலு நாச்சியாரை காப்பாற்ற மருது சகோதரர்கள் படை திரட்டுகிறார்கள்.

திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில், ஹைதர் அலியை சந்திக்கிறார்கள். அவரது பாதுகாப்பில் வேலு நாச்சியாரை தங்கவைக்கிறார்கள். 1772 முதல் 1780 வரை தலைமறைவு வாழ்க்கை நடத்தி, மருது சகோதரர்கள் படை திரட்டுகிறார்கள்.

ஆற்காடு நவாப்பிற்கும், ஆங்கிலேயர்களுக்கும் எதிராக படை திரட்டும் மாமன்னர் மருது பாண்டியர்கள் கட்டபொம்மன் தலைமையில், இணைப்பை ஏற்படுத்துகிறார்கள். ஹைதர் அலியின் உதவி அவர்களுக்கு கிடைக்கிறது. ஊமத்துரையும், சின்ன மருதுவும் நெருக்கமான நண்பர்களாகிறார்கள். சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில், அடிப்படை மக்களுடன் இரண்டறக் கலந்து வாழத் தெரிந்த மாமன்னர் மருது பாண்டியர்கள், சுதந்திரப் படையைத் திரட்ட முடிகிறது.

1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மாமன்னர் மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆற்காடு நவாப், தொண்டைமான் மற்றும் கும்பினியர்களின் படைகளை வெற்றி கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர்.

இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். அரசியாரின் போர் வியூகத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலியின் படையும் வெற்றிக்கு உதவியது.